Tuesday, May 13, 2014

Best Books follows

சிறகுகள் சுமையாவதில்லை -1
 -கிராபிக்ஸ் பா. கண்ணன்.

ஷாட் ஹெம்ஸ்டெட்டர் அவர்கள் எழுதிய
நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு -
நூலை வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். - நாம் அனைவருமே
காப்மேயரின் நூல்களோடும் மற்றவர்களின் நூல்களோடும் வாழ்ந்து இருக்கிறோம். வாழ்ந்து கொண்டும் இருக்கிறோம்.

பாவேந்தர் பாரதிதாசன், ம.பொ.சி. கவியரசு கண்ணதாசன், நெல்லைக் கண்ணன், தமிழ்க்கனல், பொ.ம,ராசாமணி, கி.வ.‍சகநாதன் என இலக்கியவாதிகளோடு பழகியதோடு மட்டுமின்றி தானும் ஒரு இலக்கியவாதியாகத் திகழ்ந்தவர் என் தந்தை. என் ஏழாவது வயதில் என்னை பொதுநூலகத்திற்கு அழைத்துச் சென்று உறுப்பினராக்கி, எதிர்காலத்தில் உனக்குப் பக்கபலமாக இருக்கக் கூடிய நண்பர்கள் இவர்கள் தான் என்று நூல்களை அறிமுகப்படுத்தி வாசிக்கக் கற்றுக் கொடுத்தவரும் இவரே.

இலக்கியம் சோறு போடாது என்பதும் என் தந்தையின் கருத்து. இலக்கியம் சோறு போட்டதோ இல்லையோ - இலக்கியம் எனக்கு எழுதும் ஆற்றலைக் கொடுத்தது - மற்றவர்களின் மனதைப் படிக்கும் திறமையைக் கற்றுக் கொடுத்தது. எதிர்வரும் சூழ்நிலைகளை சமாளிக்கும் வல்லமையைக் கற்றுக் கொடுத்தது. அதுபோல் கணினித் தமிழ் நூல்களை எழுதும் ஆற்றலைக் கொடுத்தது. கணினித் தமிழ் நூல்களை எழுதும் பொழுது படிக்கின்றவர்களின் மனநிலையில் இருந்து பார்க்கும் தனித் தன்மையைக் கொடுத்தது.

கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு இராம. கண்ணப்பன் அவர்கள் எப்படி பிரதியெடுத்துக் கொடுப்பாரோ அதே போல் என் தந்தையின் இலக்கிய வடிவங்களுக்கு பிரதியெடுத்துக் கொடுப்பது என் வழக்கம். அவ்வழியில் இலக்கியம் எனக்குப் பரிட்சயமானது.

என் பள்ளி நாட்களில் கண்ணதாசன் அவர்களின் திரைப்படப் பாடல் வரிகளை மனப்பாடம் செய்து பாடிக் கொண்டே திரியும் பழக்கம் எனக்கு உண்டு. அவரின் கவிதை வரிகளை வாசித்து அதேயே மாடலாகக் கொண்டு கவிதைகள் எழுதிய- பழகிய நாட்களும் உண்டு. அவரை என் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டு கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். என் முதல் கவிதை அன்னை இந்திரா! (இந்திரா காந்தி அவர்களின் மறைவு பற்றிய கவிதை). அப்பாவின் நண்பர் மதிப்பிற்குரிய திரு. தமிழ்க்கனல் அவர்கள் எனக்கு இலக்கியத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொடுத்தார். ஒரு வரி எழுதாமல் சோற்றில் கை வைக்காதே - உத்தரவும் போடுவார்.

என் தந்தைக்குத் தெரியாமல் கவிதைகள் எழுதுவதும், அவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதும் என் வழக்கமானது. பத்திரிகையில் வெளியானவற்றைப் பார்த்துவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டுப் போவார். எனக்குள் இனம் புரியாத தேடல்கள் இருந்து கொண்டே இருந்தன.
அது என்ன? கண்ணதாசன் அவர்களைப் போல் வார்த்தைகள் சரளமாக வந்து விழவில்லையே.

யாரிடம் கேட்பது? யாரைக் கேட்பது? இந்நிலையில் மதிப்பிற்குரிய இலக்கிய மேதை, சொல்சித்தர் நெல்லைக் கண்ணன் அவர்களை அவரது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. யார் நீ என்பது போல் பார்த்தார்.
நீலமணியின் (கோவில்பட்டி) பையன் என்றேன். அப்பா நலமா?
உனக்கு கவிதைகள் எழுதும் பழக்கம் உண்டா என்றார்.
ஆம். ஆனால் வார்த்தைகள் சரளமாகக் கிடைக்கவில்லை என்றேன்.

வார்த்தைகள் பஞ்சமில்லாமல் கிடைக்க வேண்டுமானால் கம்பராமாயணத்தின் பாடல்களை (பத்தாயிரம் பாடல்கள்) எவ்வளவு மனப்பாடம் செய்ய முடியுமோ அவ்வளவு பாடல்களை மனப்பாடம் செய். வார்த்தைகள் வற்றாது வந்து விழுந்து கொண்டேயிருக்கும் என்றார்!?
ஒருவேளை கண்ணதாசன் அவர்கள் கம்பராமாயணத்தின் பத்தாயிரம் பாடல் களையும் மனப்பாடம் செய்திருப்பாரோ என்னவோ! அன்றைய கல்வி அட்சய பாத்திரம் போன்றது!

சுமார் 100 பாடல்கள் வரைக்கும் மனப்பாடம் செய்தேன். அதற்கு மேல் என் மனதில் பாடல்கள் பதியவில்லை. நெல்லைக் கண்ணன் அவர்களின் வார்த்தைகளில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பதை 100 பாடல்களே எனக்குச் சொல்லிற்று. ஒரளவு வார்த்தைகள் வந்து விழத் தொடங்கின. என் சக நண்பர்களும், மற்றவர் களும்  நினைத்தவுடன் கவிதைகள் எழுதுகிறாய் என்று வியப்பது எனப் பெருமை யாக இருந்த நாட்கள் மாறி போய், கணினித் தமிழ் நூல்களை எழுதும் நிலையை நான் அடைந்தது கூட ஒரு வகையில் என் சுயபேச்சின் காரணமாகவும் இருக்கலாம்!?  மேலே சொன்னவை என் இலக்கியப் பயணத்தின் ஆரம்ப நிலைகள் பற்றியவை. இதற்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்? - நீங்கள் கேட்கின்ற - கேள்விகள் எனக்குப் புரிகிறது. சுயபேச்சு பற்றிய நூல்தானே இவை? எனக்குக் கிடைத்த வெற்றி அல்லது இலக்கிய வாய்ப்புகள் கூட என்னுள் எழுந்த சுயபேச்சின் அடையாளமாகவும் இருக்கலாம் அல்லவா?

நாம் நம் மனசுக்குள் புலம்புவதும் பழக்கமான ஒன்று தானே?
தேவையானவற்றை விடுத்து - தேவையற்றவற்றை மனசுக்குள் வீசுவதும் நம் வழக்கம் தானே? நீங்கள் எதுவாக மாற நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள் - இது மதங்கள் கடந்து, இலக்கியம் கடந்து ஏன் இலக்கிய வாதிகளைக் கடந்து வாழ்ந்த - வாழ்கின்ற அனைத்து பெரியோர்களின் அர்த்தமுள்ள வார்த்தைகள். அதைதான் இந்நூல் வெளிப்படுத்துகிறது.  

வாழ்க்கையில் உயரவேண்டுமானால் நாம் உயர்ந்து விட்டது போன்ற வரை படத்தை நம் மனதிற்குக் கொடுக்க வேண்டும். நாம் விரும்பும் பணத்தை வேண்டுமானால் அத்தகைய பணத்தைப் பெற்றுவிட்டது போன்ற நினைப்புடன் கூடிய வரைபட வடிவத்தை நம் மனதிற்குக் கொடுக்க வேண்டும்.
விளையாட்டில், கவிதையில், காமெடியில், வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பது போன்றதொரு தோற்றத்தை நாம் நம் மனதிடம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அது நமக்குக் கிடைக்கும் என்று நூல் விவரிக்கிறது.

நாம் நம் மனதிற்குக் கொடுக்கின்ற வரைபடத்தை
(1) எதிர்மறை - ஏற்புநிலை
(2) சுயபேச்சு - மாற்றத்திற்கான தேவையை அங்கீகரிக்கும் நிலை.
(3) மாறுவதற்கான தீர்மானம் - மேற்கொள்ளும் நிலை
(4) சுய பேச்சு - மிகச் சிறந்தவராகும் நிலை
(5) சுயபேச்சு - சுய பிரகடனம் என மொத்த ஐந்து நிலைகளாகப் பிரித்து ஆராய்கிறது இந்நூல். மற்ற நிலைகளை விட இறுதி இரண்டு நிலைகளும் நமக்குப் பெரும் உதவியாக இருப்பதுடன் நாம் உயர்வதற்கு வழி வக்கும் என்று இந்நூல் கூறுகிறது.

முயன்றுதான் பார்ப்போமே!

நூல் - நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு.
நூல் ஆசிரியர் -   ஷாட் ஹெம்ஸ்டெட்டர்
நூல் வெளியீடு - மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்

No comments:

Post a Comment